செவ்வாய், 29 நவம்பர், 2016

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை

கோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை

முருகன் பெயர்  :சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 8.15  இரவு மணி வரை.

முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,
சென்னிமலை
பெருந்துறை தாலுகா,
ஈரோடு மாவட்டம்,
தொலைபேசி: (04294) 250223, 292263, 292595.
மின்னஞ்சல்: chennkovil@gmail.com

கோவில் சிறப்பு :

பிரார்த்தனை கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது. இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள். இயற்கை மூலிகை மரங்கள் செடி கொடிகள் நிறைந்த மலையாக இருப்பதால் இங்கு வரும் ரத்தகொதிப்பு ஆஸ்துமா நெஞ்சுவலி நோய்கள் உடையவர்கள் குணமாகிறார்கள். இது இத்தலத்துக்கு அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை என தெரிவிக்கிறார்கள். நேர்த்திக்கடன்: முருகனுக்கு பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது. முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை. தவிர காவடிஎடுத்தல், முடிக்காணிக்கை முதலியன, கிருத்திகை அன்னதானம், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி இறக்கி காது குத்தல் சஷ்டி விரதம் இருத்தல். தவிர சண்முகார்ச்சனை, முருக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் முருகனுக்காக செய்யலாம். தலபெருமை: மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது. இது ஒர் மலைக்கோயில் இதன் உயரம் 1740 அடி, படிகள் 1320. அதிசயத்திலும் அதிசயமாக இரட்டை மாட்டு வண்டி 1320 திருப்படிகள் வழியே தங்கு தடையின்றி ஏராளமான செங்குத்தான வளைவுகள் உள்ள பாதை வழியே மலையேறிய அதிசயம் நடந்தது. சிறப்பு மிகுந்த சஷ்டி விரதம் : குழந்தை வரம் வேண்டுவோர் முறையாக சஷ்டி விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும். சிரசுப் பூ உத்திரவு கேட்டல்: திருமணம், வரன்கள், விவசாயம், கிணறுவெட்டுதல், புதிய வியாபாரம் தொடங்கல், வியாதிகள் ஆகியவை குறித்து முடிவு செய்ய ஆண்டவர் முன்னால் அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்திரவு கேட்டு நல்ல உத்திரவு கிடைத்தபின்பு காரியத்தை தொடங்குகிறார்கள். சிரசுப்பூ உத்திரவு நல்லபடியாக கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட செயல்களை பக்தர்கள் தொடங்குவதில்லை. முருகன் நடுநாயகமாக, மூர்த்தியாக, செவ்வாய் கிரகமாக அமைந்து மூலவரைச் சுற்றி எட்டு நவகிரகங்கள் உள்ளன. மூலவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு. கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழி காட்டிய தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை. இவர் மிகவும் விசேஷமானவர். கோயிலுக்கு பின்புறம் பிண்ணாக்கு சித்தர் குகை உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத வேங்கை மரத் தேர் இத்தலத்தில் உள்ளது. அடர்ந்த மரங்கள் அடர்ந்த மலை மீது அமைந்துள்ள மிக அழகான அமைதியான சிறப்பு வாய்ந்த கோயில். கந்த சஷ்டி அருங்கேறிய ஸ்தலம்: உலகில் உள்ள முருக பக்தர்கள், தினமும் மனமுருகி பாராயணம் செய்யும், ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம்' இயற்றிய ஸ்ரீபாலன்தேவராய சுவாமிகள், காங்கேயம் நகரின் அருகில் உள்ள மடவிளாகத்தை சேர்ந்தவர். இவர், மைசூர் தேவராசஉடையாரின் காரியஸ்தரில் ஒருவராவார். இவர் முருக பக்தர். ஐப்பசி மாதம், கந்த சஷ்டி அன்று, வேற்று மதத்தவர்களிடம் அனல்வாதம் (தான் எழுதிய நுõலை சான்றோர்கள் முன், நெருப்பிலிட்டு, தீயில் கருகாமல் திரும்ப எடுத்து அரங்கேற்றுவது), புனல்வாதம் (கரைபுரண்டு ஓடும் ஆற்று வெள்ளத்தில், தான் எழுதிய நுõலை இட்டு, நீரில் எதிர்கொண்டு செல்லும் சுவடிகளை எடுத்து அரங்கேற்றுவது) செய்து, கந்த சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய முருகனை வேண்டினார். அதற்கு உரிய ஆலயமாக சென்னிமலையை, முருகப்பெருமானின் அருளாணையால் உணர்ந்து, இங்கு கந்த சஷ்டி கவசத்தை சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என இத்தலத்து பெருமானை அழைத்து, அரங்கேற்றம் செய்து, பெருமைபடைத்தார். சஷ்டி விரத மகிகை: கந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இத்தலத்தில், பிரதி மாதம் வளர்பிறை சஷ்டி திருநாளிலும், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டி திருவிழா, ஆறாம் நாளில் எண்ணற்ற பக்தர்கள், சந்தான பாக்கியம் வேண்டி விரமிருப்பது தொன்று தொட்ட நோன்பாகும். இதை முன்னோர்கள், சஷ்டியில் இருந்தால், அகப்பையில் வரும்' எனக்கூறுவர். குழந்தை வரம் வேண்டி முறையாக, சஷ்டி விரதம் கடைபிடிப்போருக்கு, சென்னிமலை ஆண்டவர் குழந்தைப்பேறு அருள்வது கண்கூடானது. குழந்தை வரம் வேண்டுவோரும், வரத்தின் பலன் கிடைத்த பின்னரும், குழந்தைகளோடு வளர்பிறை சஷ்டித்திருநாளில், ஆண்டவரை தரிசித்து செல்வது இன்னும் தொடர்கிறது. திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், சந்தான பாக்கியம் வேண்டி, பச்சரிசி மாவிடித்து, தீபம் ஏற்றி, வழிபடுவதும், சன்னதி முன் தாலி சரடு கட்டிக்கொள்வதும் வழக்கம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம்: ஈரோடு மாவட்டத்தில், குன்று போன்ற உயரத்தில் சென்னிமலை அமைந்துள்ளது. அங்கிருந்து உயரமான மலையின் மீது, முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு மலைப்பாதையாக வாகனங்கள் செல்ல, ரோடு வசதி உள்ளது. தேவஸ்தானம் மூலம், பக்தர்களை அழைத்து செல்ல பஸ் வசதி உள்ளது. பக்தர்களே, அவர்களது வாகனங்களில் சென்று வரவும் அனுமதி உண்டு. அத்துடன், மலைப்பாதையாக, 1,320 திருப்படிகள் ஏறி செல்ல படிகள், நிழற்கூரைகள் உள்ளன. இவ்வழியாகவே அதிக பக்தர்கள் சென்று, தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 1984, ஃபிப்ரவரி, 12ம் தேதி உலக அதிசயமாக, இரட்டை மாட்டு வண்டி, படி வழியாக மலையேறிய அதிசயம் நிகழ்ந்தது. முதல் நாள் இரவே மலை மற்றும் நகரம் முழுவதும், பல லட்சம் பேர் திரண்டனர். அதிகாலையில், இரட்டை மாட்டு வண்டி, தடையின்றி, படிகள் வழியாக ஏறிச்சென்ற நிகழ்வு, இறைவனின் திருவிளையாடலாக கருதப்படுகிறது. எனவே, இத்தலம், செவ்வாய் பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது. ஏற்கனவே, நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலிலும், முருகப்பெருமான் செவ்வாய் அம்சமாகவே அருள்பாலிப்பதால், செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. அதுபோல, சென்னிமலையும், பரிகார ஸ்தல சிறப்பு பெற்றுள்ளது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உடையவர்கள், இத்தலத்தில் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி, வழிபட்டால், தோஷத்துக்கான காரணிகள் நீங்கி, சுபிட்ஷம் பெருவர். முருகன்பெருமான் நடத்தும் சூரசம்ஹார நிகழ்வை, சிக்கலில் வேல் வாங்கி, செந்துõரில் சம்ஹாரம்' என்பவர். நாகை மாவட்டம் சிக்கல் கோவிலில், சூரசம்ஹாரத்துக்கு முன்பாக, பார்வதி தேவியிடம் இருந்து முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கும். இதைத்தொடர்ந்து, திருச்செந்துõரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கும். இதனால், சிக்கல் மற்றும் திருச்செந்துõருக்கு, சஷ்டியின்போது ஏராளமான பக்தர்கள் குவிந்து, முருகனை தரிசனம் செய்வர். குரு ஸ்தலமாக கருதப்படும் திருச்செந்துõரில் பக்தர்கள் தரிசனம் செய்து, முருகன் மற்றும் குரு பரிகாரம் பெறுவதுபோல, கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட, சென்னிமலையில், சஷ்டியின்போது முருகனை தரிசனம் செய்து, செவ்வாய் தோஷம் நீங்கப்பெறுவர். சஞ்சீவி மூலிகைகள்: நோய் தீர்க்கும் வல்லமை கொண்ட, சஞ்சீவி மூலிகைகள் பல, சென்னிமலை மலையில் உள்ளன. இம்மலையில் வெண்சாரை, வெண்தவளை, கானாச்சுனை, கெயாத எட்டி, கரநொச்சி முதலிய சஞ்சீவி மூலிகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. உடற்பிணி நீங்க வேண்டி, பல தலங்கள் சென்று வழிபட்டு, இத்தலத்தை வந்தடைந்து, சென்னிமலை ஆண்டவனை வணங்கி, நோய் நீங்க பெற்ற சோழ அரசரான சிவாலயச் சோழன், அதற்கு பரிகாரமாகவே, மலைக்கோவிலை அமைத்தார், என்பர். வானில் வந்தவர் இங்கேயே வாழ்ந்தார்: இறைவன் கிருபையும், அருளையும் மறுத்துரைப்பவர்கள், பொய் சொல்பவர்கள் நாவானது புண் பொருந்திய நாக்கு' எனக்கூறியவர் தன்னாச்சி அப்பன் சித்தர். 18 சித்தர்களில் ஒருவரான இவரை முனிவர் என்றும், புண் நாக்கு' சித்தர் என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் புண்ணாக்குச் சித்தர்' என்று பெயர் மருவியது. இவர், தனது நாக்கை பின்புறமாக மடித்து, அருள்வாக்கு சொல்லி வந்ததாலும், இவர் பின்நாக்கு சித்தர் என அழைக்கப்பட்டார். சித்தராக வானவீதி வழியாக பறந்து வந்த இவர், நிலையாக இவ்வாலயத்தில் இருந்து, சென்னிமலை சுப்ரமணியரை நினைத்து, யோக நிலையில் தவம் புரிந்தார். பின்னர் சென்னிமலையிலேயே, புண்ணாக்குச் சித்தர் சிவசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த பின், அவருடைய சிலையை, தற்போதைய இடத்தில் நிறுவி, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆண்டி வடிவில் அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம், தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணாக்குச் சித்தர். சென்னிமலையில், 1,740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோவிலில், இவர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சன்னதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முகமாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக விளங்குகிறது. இக்குகை, பழனி வரை செல்வதாக நம்பப்படுகிறது. 20 தீர்த்தங்கள் கொண்ட சென்னியங்கிரி மலை: சென்னிமலை, மலைக்கோவிலில், 20 வகை தீர்த்தங்கள் உள்ளன. இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இமயன் தீர்த்தம், காசிபதீர்த்தம், பட்சி தீர்த்தம், நிருதிதீர்த்தம், சிவகங்கை காசிக்கிணறு, மாமங்க தீர்த்தம், வரடி தீர்த்தம், காளி தீர்த்தம், தேவி தீர்த்தம், செங்கழுநீர், வாலி விஷ்ணு தீர்த்தம், நெடுமால் சுனை, பிரம்ம தீர்த்தம், தேவர்பாழி, நவவீர தீர்த்தம், சாரதா தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், தெப்பக்குளம் முதலிய தீர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன. இத்தனை தீர்த்தங்கள் இருந்தாலும், சென்னிமலை ஆண்டவரின் தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கு, மலை அடிவாரத்தில் இருந்து திருமஞ்சன தீர்த்தம், மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

* நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடன் இருக்க இடுப்புக்கு கீழ் பாதம் வரை கரடுமுரடாக இருக்க அதை உளி கொண்டு செதுக்க முயன்றார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு எல்லோரும் பயந்து போய் வேலையை நிறுத்தி விட்டு அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலை இடுப்புக்கு கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். தவிர ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யுத்தம் ஏற்பட்டபோது ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் சென்னி மலை என்று கூறுகின்றனர்.


 * சத்தியஞானி புண்ணாக்கு சித்தர். மலைமேல் இவர் குகை உள்ளது. அம்மன் சன்னதியிலிருந்து பின்புறம் சென்றால் மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான பின் நாக்கு சித்தர் (புண்ணாக்கு சித்தர் கோயில் வேல்கள் நிறைந்து வேல்கோட்டமாக அமைந்துள்ளது. இதன் அருகே சரவணமாமுனிவரின் சமாதிக் கோயிலும் உள்ளது.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: